ராஜ்யசபா தேர்தலுக்கு ஓட்டு போட கவச உடையுடன் வந்த காங்கிரஸ் எம்எல்ஏ

ராஜ்யசபா தேர்தலுக்கு ஓட்டுப்போட பிபிஇ கவச உடையுடன் வந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர்.

மத்திய பிரதேசத்தில் இன்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் ஒட்டளிக்க வந்த காங். எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனா தொற்று பீதியால் பி.பி.இ. எனப்படும் கவச உடையுடன் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிபிஇ கிட்டுகள் எனப்படும் கவச உடைகள் வழங்கப்படுகிறது. முகக்கவசம், கண் கவசம், ஷூ கவர், கவுன் மற்றும் கை உறை ஆகியவை இதில் அடங்கும்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒட்டளிக்க வந்தனர். அப்போது குணால் சவுத்ரி என்ற காங்.எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அணியும் பி.பி.இ. எனப்படும் கவச உடையுடன் வந்து ஓட்டளித்தார்.

இதை பார்த்து மற்றவர் இந்த யோசனை நமக்கு வரவில்லையே என்று பேசிச் சென்றனர். இவர் ஓட்டளித்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.