இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது சற்று ஆறுதலடைய செய்கிறது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 9,36,181 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 582 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 24,309 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உயரிழப்பு விகிதம் 2.6 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 5,92,032 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடைய 3,19,840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது.