அந்தமான் நிகோபார்க் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் அந்தமான் நிகோபார்க் தீவுகளும் ஒன்று. இங்கு சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் போன்ற நகரின் முக்கிய இடங்களில் பரவியுள்ளது. இதுவரை அங்கு 2 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அங்கு 37 பேர் உயிரிழந்தனர். அந்தமான் நிகோபார்க்கில் பல்வேறு தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் பல்வேறு பழங்குடியின மக்கள் சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வெளி ஆட்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகளுக்கு செல்ல இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த அந்தமான் தீவுக்கூட்டங்களில் வசித்துவரும் பழங்குடியினங்களில் கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்களும் ஒன்று.

அந்தமான் நிகோபார்க் தீவுக்கூட்டங்களில் ஸ்டிரிட் என்ற தீவில் கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பிரிட்டிசாரின் வருகைக்கு முன்னர் 5 ஆயிரம் கிரேட்டர் அந்தமான்
பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். தற்போது கிரேட்டர் அந்தமான் பழங்குடியினரின் மொத்த எண்ணிக்கை 50 என்ற மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் இவர்களை பாதுகாக்கப்பட்ட இனமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட இந்த பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரில் சிலர் அரசு பணியில் இருப்பதால் அவர்கள் போர்ட் பிளேயரில் உள்ள அரசு அலுவலகம் வந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பழங்குடியினர் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஸ்டிரிட் தீவில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 4 பழங்குடியினருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.