இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அசுரவேகத்தில் பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வது, சற்று ஆறுதலடைய செய்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 10,38,716 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 671 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 6,53,751 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 3,58,692 பேர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளது.