செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 6,633 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை மேலும் 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 6,633 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,821 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,445 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் பல்வேறு தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.