சென்னையில் 3 மண்டலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம்...அதிகாரிகள் தகவல்

சென்னையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. குறிப்பாக வடசென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கணிசமாக குறைந்துவிட்டது. வடசென்னையில் பாதிப்பு 5 முதல் 6 சதவீதமாக உள்ளது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் தினசரி பாதிப்பு 200-க்கும் குறைவாக உள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம் மண்டலத்தில் மட்டும் மிகவும் குறைந்து நாள் ஒன்றுக்கு பாதிப்பு 30 பேராக குறைந்துள்ளது. வடசென்னை பகுதியில் கடந்த 2 வாரமாக தினசரி 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

வடசென்னை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 200க்கும் குறைவாக பாதிப்பு உள்ளது. தண்டையார் பேட்டை, ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. அங்கு நேற்று 60 பேருக்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது. தற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால், சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

பாதிக்கப்படுவோர்களின் உறவினர்கள், தொடர்பில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். சென்னைக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது. குணமடைந்தவர்களின் சதவீதம் 89 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் சதவீதம் 9 ஆகவும் உள்ளது. அண்ணாநகர், அடையாறு, கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது என்றனர்.