தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது; சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,525 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,506 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல என்று கூறினார். மேலும் பொது சுகாதாரத் துறையின் சார்பில் எடுக்கப்படும் பரிசோதனை குறித்த விவரங்கள் ஐ.சி.எம்.ஆர். இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் தாமதத்தால் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது. இதில் எந்த குளறுபடியும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.