விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,027 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 18,420 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 2,806 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை 13,542 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 20 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 108 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,027 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 656 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 2,200 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனினும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.