இலங்கையில் கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம்

கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம்... உக்ரைனிலிருந்து வந்த விமான பணியாளர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவரே இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலைக்கு காரணம் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் புலனாய்வு அமைப்புகள் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டி இருப்பதாவது:

துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியானதைத் தொடர்ந்து அவர் கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருடன் தொடர்புடைய ஹோட்டல் பணியாளர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற போதிலும் ஹோட்டல் நிர்வாகம் இதனை பின்பற்றவில்லை.

இதனையடுத்து, குறிப்பிட்ட ஹோட்டலில் பணியாற்றும் 60 பணியாளர்களில் 18 பேர் தங்கள் வீடுகளுக்கு சென்று வருபவர்கள் என்றும் அவர்களில் ஐவர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்களிடம் காணப்பட்ட வைரஸ்கள் ஒரே மாதிரியானவையாக காணப்படுகின்றன என்றும் இது இரண்டாவது அலை சீதுவ ஹோட்டலில் இருந்தே ஆரம்பமானது என்பதை இது புலப்படுத்தியுள்ளது எனவும் குறித்த சிங்கள நாளிதழ் அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.