உலக சுகாதார அமைப்பு தனது வேலையைச் சரியாகச் செய்திருந்தால் கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்காது - சஞ்சய் ராவத்

சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பேட்டி ஒன்று அளிக்கையில், கொரோனா பரவலுக்கு உலக சுகாதார அமைப்பு தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும் டாக்டர்களை விட கம்பவுண்டருக்கு அதிகம் தெரியும் என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விமர்சனத்துக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர் விளக்கமளிக்கையில், நான் யாரையும் அவமதிக்கவில்லை. குறிப்பாக மருத்துவர்களை அவமதிக்க முடியாது. நான் உட்பட எவரும், மருத்துவப் பணியில் உள்ள மருத்துவர்களையும் மற்றவர்களையும் ஒருபோதும் அவமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுநோய்களின் போது மருத்துவர்கள் செய்த பங்களிப்புக்குப் பிறகு யாரும் அவர்களை அவமதிக்க முடியாது. கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டுபாய்கள் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர். நெருக்கடியாக காலகட்டத்தின் போது உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பு பற்றி பேசியிருந்தேன் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மேலும் அவர், எனது இந்த கருத்து சிலரால் தேவையின்றி அரசியல்மயமாக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு தனது வேலையைச் சரியாகச் செய்திருந்தால், கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியிருக்காது என்று கூறியுள்ளார்.