திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 263ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 241 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 35 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 241 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 263ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.