தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 14,753 ஆகவும், பலி எண்ணிக்கை 98 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 66 பேர், டில்லியில் இருந்து வந்தவர்கள் 13 பேர், மேற்குவங்கத்தில் இருந்து வந்தவர்கள் 6 பேர், ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் 2 பேர்.

குஜராத், ம.பி., ஒடிசா, தெலுங்கானாவில் இருந்து வந்த தலா ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவரும் அடங்குவர். இதனால் தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் இருவரும், தேனி, செங்கல்பட்டில் தலா ஒருவரும் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.