விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 97 ஆயிரத்து 838 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16,566 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 14 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட சுகாதார துறையினர் பாதிப்பு நிலவரத்தை முறையாக அறிவிக்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிகை விடுத்து வந்த போதிலும் மாவட்ட சுகாதார துறையினர் அதனை தெரிவிக்காத நிலையே நீடிக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட மக்கள் தெரிய முடியாத நிலையில் முன்னெச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. பொது இடங்களிலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனையும் கண்காணிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கடைபிடிக்காவிட்டால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.