கொரோனா வைரஸ் அறிகுறி...மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்

கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த மனைவியை குழந்தைகளுடன் வீட்டை விட்டு துரத்திய கணவர் ஒருவரால் குஜராத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

குஜராத் மாநிலத்தில் வதோரா என்ற பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது. அவர் தன்னுடைய மாமியார் இருதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தபோது அவரை மருத்துவமனையிலேயே இருந்து கவனித்துக் கொண்டிருந்ததால் தான் அவருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

தனது தாயாரை கவனித்ததால் தான் தனது மனைவிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டது என்பதை அறிந்தும் அவரது கணவர் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியதோடு அவருடன் குழந்தைகளையும் வெளியேற்றியுள்ளார். அந்த பெண் தான் வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறிய போதிலும் வலுக்கட்டாயமாக குழந்தைகளுடன் அவரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்துள்ளது.

அதன்பின் குழந்தைகளுடன் அந்த பெண் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் அவரை சந்தித்து அவரது கணவர், அவரை விவாகரத்து செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்க கூடாது என்றும் அவர்கள் மீது அன்பும் கருணையும் காண்பிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி வரும் கணவன் தனது மனைவியையே வீட்டை விட்டு விரட்டியது மட்டுமின்றி விவாகரத்தும் செய்வேன் என்றும் மிரட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது