சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டமிடல்

சென்னை: தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. 1,545 பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சிற்றுண்டிக்கு ஆண்டுக்கு ரூ.1.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இந்நிலையில் சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க பல தரப்பட்ட நடவடிக்கைகள் மாநகராட்சி எடுத்து கொண்டு வருகிறது.

மேலும் அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அரசு அனுமதிக்கும் பட்சத்தில் காலை சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் தயாரித்து விடுவோம். என தெரிவித்துள்ளனர்.