சென்னை விமான நிலைய திரையரங்கம் குறித்து நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: உயர்நீதிமன்றம் அனுமதி... சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கம் அடுத்த உத்தரவு வரும் வரை இயங்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்தின் போது முன்பகுதியில் 6 மாடி வாகன நிறுத்தத்துடன் கட்டப்பட்ட ஏரோ ஹப் வணிக வளாகத்தில 5 திரைகளைக் கொண்ட பி.வி.ஆர். திரையரங்கம் இயங்கி வருகிறது.

அங்கு படம் பார்க்க வருவோர் வாகனங்களை நிறுத்துவதால், உள்நாட்டு முனைய பயணிகள் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து திறந்து 5 மாதங்கள் இயங்கி வந்த திரையரங்கை மூடுமாறு இந்திய விமான நிலைய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. வணிக வளாகத்தை பராமரித்து வரும் மீனம்பாக்கம் ரியாலிட்டி நிறுவனம் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

விமான நிலைய ஆணைய சட்டத்தின் படி திரையரங்கம் நடத்த அனுமதி இல்லை என்று நோட்டீசில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய ரியாலிட்டி நிறுவனம், திரையரங்கத்தை கட்டிய போது, அதற்கான அனைத்து உரிமங்களையும் பெற்றுத் தந்ததே விமான நிலைய ஆணையம் தான் என்று கூறியுள்ளது.

திரையரங்கம் மூடப்பட்டால் மக்கள் வருவது குறைந்து வணிக வளாகத்தில் உள்ள சில்லறை கடைகள் மற்றும் உணவு அரங்குகளின் வியாபாரமும் முடங்கும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன்பேரில் திரையரங்கம் நடைமுறை நிலையில் அடுத்த உத்தரவு வரும் வரை இயங்கலாம் என்று தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், விமான நிலைய ஆணைய தரப்பு வாதத்தை சமர்ப்பிக்க 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.