டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பு


சென்னை: பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து பெரும் விபத்தில் சிக்கினார்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு ஒன்று பதிவு செய்தது. டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளது.

எனவே அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்தது. இதற்கு இடையே டிடிஎஃப் வாசன் 2 முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டு உள்ளார். 3 முறையாக டிடிஎஃப் வாசனுக்கு வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.