அரசியல் கட்சிகளின் விளையாட்டு மைதானங்கள் ஆக்கப்படும் நீதிமன்றம்: நீதிபதி வேதனை

சென்னை: நீதிபதி வேதனை... ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும் நீதிமன்றங்கள் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் சொந்த அரசியல் விளையாட்டு மைதானங்களாக்கப்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, அரசு என்பது சட்டப்படியான ஒன்று என்று கூறியுள்ளார். எந்த கட்சி அதிகாரத்திற்கு வருகிறது என்பது முக்கியமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், தனி நபர் அல்லது ஒரு அரசியல் கட்சியின் செயல் திட்டம் சட்டத்தின் ஆட்சியை வீழ்த்தி விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படும் இயல்பை இழந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பிறப்பிக்கும் உத்தரவுப்படி அதிகாரிகள் செயல்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாத பொருளாக மட்டுமே நீடிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சாதாரண ஏழை வழக்காடிகளுக்கான நீதிமன்ற நேரம் அரசியல் சார்ந்த வழக்குகளால் விழுங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.