குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளத்தால் பாதிப்பு

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது. இதை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

'நிவர்' புயல் காரணமாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளில், பல இடங்களில் வெள்ளம் தேங்கிஉள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், தென்சென்னையில் உள்ள ஒரே அரசு மருத்துவமனையான, குரோம்பேட்டை மருத்துவமனையில் பழைய கட்டடத்திற்குள் வெள்ளம் புகுந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வார்டுகள், வெளிநோயாளிகள் பிரிவு, மருந்தகம் ஆகியவை வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. நுழைவாயிலில் மணல் மூட்டைகள் அடுக்கியும், வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மருத்துவமனைக்குள் தேங்கிய மழை நீரை, மூன்று மோட்டார்கள் மூலம், இரவு முழுதும் அகற்றினர்.

தொடர்ந்து மழை பெய்து மீண்டும் வெள்ளம் தேங்கினால், அவற்றை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.