கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்

கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு நான்காவது இடம்... உலக அளவில் புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகும் நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கெடுபிடி தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. தெலுங்கானா போன்ற ஒரு சில மாநிலங்கள் தான் ஊரடங்கு உத்தரவை இன்னமும் கடுமையாக கடைபிடித்து வருகின்றன.

இந்நிலையில்தான், உலக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான பட்டியலில், இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. புதிய பாதிப்புகள் அதிகம் இங்கு பதிவாவதுதான் இதற்கு காரணம். அமெரிக்காவில் புதிதாக 20,329 பாதிப்புகள் பதிவாகி உள்ளதால் அது முதல் இடத்தில் உள்ளது.

புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவாகியுள்ள ரஷ்யாவில், 11 ஆயிரத்து 12 புதிய நோயாளிகள் உள்ளனர். பிரேசில் நாட்டில் 6,368 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்தியாவில் 4,353 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெரிதும் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நாட்டில் கூட 3,923 பேர்தான் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தியா ஐந்தாம் இடத்திற்கு போய் உள்ளது. ஆனால், மொத்த பாதிப்புகள் என்பது மேலே குறிப்பிட்ட நாடுகளை விட இந்தியாவில் குறைவாக இருப்பது மட்டுமே இப்போதைக்கு ஆறுதல். 67 ஆயிரத்து 161 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு பரிசோதனையின் அளவு குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதால் இதை ஒரு சாதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊரடங்கு உத்தரவு கெடுபிடிகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வரும் நிலையில் இந்த
பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.