இந்தியா: நேற்று முன்தினம் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மாலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பிப்பர்ஜாய் புயலாக மேலும் வலுவடைந்தது.
இதையடுத்து இது வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவிலிருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையிலிருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பின் வடக்கு வடமேற்கு திசையில் அதற்கடுத்த 3 தினங்களில் நகரக்கூடும்.
இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டு உள்ள பிபோர்ஜோய் புயல் மிக தீவிரப்புயலாக வலுவடைந்தது. இது மேலும் தீவிரமடைந்து அடுத்து 3 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என சொல்லப்படுகிறது. இதனால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரை உள்ள மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.