சென்னை: மழை பெய்யக்கூடும் ... தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல நாளை (25.12.2022) தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடற்கரை அருகில் நிலவும். அதனால் தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து டிசம்பர் 26ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். எனவே இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்தாக 27,28 ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் டிச.24, 25, 26ம் தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.