தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு... குரூப் 4 தேர்வர்கள் வாக்குவாதம்

சீர்காழி: தேர்வர்கள் வாக்குவாதம்... சீர்காழியில் குரூப் - 4 தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களை அதிகாரிகள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குரூப் 4 தேர்வுக்காக 27 மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 5799 பேர் தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர். இன்று காலை தேர்வு தொடங்கிய நிலையில் சீர்காழி தென்பாதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 40க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர்.

அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாரையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அவர்களிடம் பேசிய வட்டாட்சியர், 9 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்ததால் தாமதமாக வந்த 40க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாத விரக்தியில் சென்றனர்.