பணமதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்களை சேகரித்து வைத்திருந்த முதியவருக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் மனிதாபிமானம்... ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பணமதிப்பிழப்பு குறித்து அறியாது பழைய ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்திருந்த கண் தெரியாத முதியவருக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனது சொந்த பணத்திலிருந்து 25ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

பொதிய மூப்பனூரை சேர்ந்த பார்வைத்திறனற்ற சோமு, மாற்றுத்திறனாளி மனைவி பழனியாம்மாளுடன் வசித்து வருகிறார். இருவரும் சிறுகசிறுக சேமித்த பணத்தை சோமுவின் தாயாரிடம் கொடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், பழனியம்மாள் வீட்டில் வேறு எதோ ஒருபொருளை தேடும்போது, முன்பு சேர்த்து வைத்த பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என 24 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

பழனியம்மாள் வங்கிக்கு சென்று கேட்டபோது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதாகக் கூறியதால் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் இருவரையும் தனது முகாம் அலுவலகத்திற்கு அழைத்து, தனது சொந்த பணத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சோமுவிடம் வழங்கினார். கொரோனா காலத்தில் அந்த முதியவர்களுக்கு மனிதாபிமானத்துடன் தனது சொந்த பணத்தை கொடுத்து உதவிய மாவட்ட ஆட்சியர் கதிரவனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.