விளம்பரம் செய்வதில் மட்டும் தான் திமுக கவனம் செலுத்துகிறது: பாஜ தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: விளம்பரம் செய்வதில் மட்டுமே கவனம்...திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, விளம்பரம் செய்வதில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 15 அன்று, பெரிய விளம்பரத்தோடு, ஸ்டாலின் அவரது தந்தையின் பெயரில் கிண்டியில் திறந்து வைக்கப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், கடந்த மூன்று மாதங்களாக டாக்டர்களுக்கும், இதர பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை என்று நாளிதழ்களில் வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, விளம்பரம் செய்வதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, எந்தத் திட்டங்களும் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதில்லை. மூன்று மாதங்கள், டாக்டர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இருந்தால், அவர்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் என்பதைக் கூட உணராமல் திமுக அரசு செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக அரசு, வீண் விளம்பரங்களுக்குச் செலவிடுவதை நிறுத்திவிட்டு, அரசு டாக்டர்களுக்கும் ஊழியர்களுக்கும் குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

உடனடியாக, கிண்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஊதியப் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், முதல்வர், மருத்துவமனைக்குத் தனது தந்தையின் பெயர் வைத்திருக்கும் மரியாதையையாவது காப்பாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் பாஜ., சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.