இன்றைய நாள் என்னவென்று தெரியுமா? கைக் கொடுத்து உயர்த்துவோம்!!!

நாடு முழுவதும் இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் கடந்த 2015 ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' கடந்த 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது.

நம் நாட்டில் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மேலும், நமது நாட்டின் கலாச்சார பண்பாட்டை தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 'தேசிய கைத்தறி தினம்' கொண்டாடப்படுகிறது. முதன்முறையாக கடந்த 2015 ஆண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தரமான கைத்தறிக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் ;இந்திய கைத்தறி முத்திரையை' அறிமுகம் செய்து, 'பிரயாஸ்' எனும் புத்தகத்தையும் வெளியிட்டார்.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் மக்கள் கைத்தறி துணிகள் வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் இத்தினத்தில் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அனுபவம் மிக்கவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் தொன்று தொட்டு நடந்து வரும் கைத்தறி நெசவு தொழிலை போற்றுவோம். நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வு உயர கைக்கொடுப்போம்.