மழையால் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பு... முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசு மழை நீரை வெளியேற்றுவதற்கான சரியான முறைகளை மேற்கொள்ளாததால் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பதோடு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 5-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுக அரசு மழை நீரை வெளியேற்றுவதற்கான சரியான முறைகளை மேற்கொள்ளாததால் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பதோடு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்த போது நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அந்த திட்டத்தை பாராட்டினார். கடந்த 2000 வருடங்களுக்கு முன்பாக செயல்படுத்தப்பட்ட குடி கிராமத்து திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்து அதை செயல்படுத்தினார். இதனால் ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்கள் போன்றவைகள் தூர்வாரப்பட்டது.

தற்போது அதிக அளவில் மழை பெய்வதால் நிலத்தடி நீரை சேமிக்கும் பட்சத்தில் கோடைகாலத்தில் விவசாயிகளுக்,கு பொதுமக்களுக்கும் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் திமுக அரசோ நீர் மேலாண்மையில் மிகவும் பின்தங்கி இருப்பதோடு குடி கிராமத்து திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து சட்டசபை மானிய ஒதுக்கீட்டில் பேசக்கூட இல்லை‌.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ 1132 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5586 நீர் நிலைகளை தூர் வாருவதற்கு வித்திட்டார். அதோடு ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்கள் தூர்வாரப்பட்டதால் கோடைகாலத்தில் விவசாயிகள் பெரிதும் பயனடைந்தனர். இப்படி பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் அடங்கிய குடி கிராமத்து திட்டத்தை திமுக மீண்டும் கொண்டு வருமா? கடலில் தற்போது வீணாக கலக்கப்படும் தண்ணீரை நிலத்தடி நீராக சேமிப்பதற்கு திமுக அரசும் முயற்சிக்குமா? . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.