இந்தோனேசியா நாட்டில் நிலநடுக்கம் .. 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, 300க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியா : பயங்கர நிலநடுக்கம் .... தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ஒரு தீவு நாடாகும். இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இதையடுத்து இந்த நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரை மட்டும் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவு முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் காரணமாக மின்சாரம் துண்டிப்பு, உடமைகள் இழப்பு, கால்நடைகள் பாதிப்பு என அந்நாட்டு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.