அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்ற விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்து வந்தது.

இதற்கு இடையே அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே வெளிப்படையாக கருத்து மோதல் வெடித்தாக தகவல் வெளியானது. இதனால் கட்சி தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்.,7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, இன்று முதல்வர் வேட்பாளரை அறிவிக்க சுமார் 18 மணி நேரம் மூத்த அமைச்சர்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், ஒபிஎஸ் - இபிஎஸ் உடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தினர். இந்த ஆலோசனை அதிகாலை 3 மணி வரை இந்த ஆலோசனை நீடித்தது. இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்து துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். இதில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ,சிவி சன்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ், பாண்டியன், மோகன், கோபல கிருஷ்ணன் மற்றும் சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றனர்.

இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவித்தார். இதையடுத்து கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.