எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்; முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93), உடல்நலக் குறைவால் காலமானார்.

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணியளவில் உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்றார்.

சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று தூத்துக்குடி, நாளை கன்னியாகுமரி, விருதுநகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.