தோல்வியடைந்தாலும் நாங்கள் இருக்கிறோம் அவருடன்!!!

ரோடக்: நாங்க இருக்கோம் உங்களுடன் என்று உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியுற்றவருக்கு கோடிக்கணக்கான பணமும் கொடுத்து, சொகுசு காரும் பரிசாக வழங்கி உள்ளனர் அரியானா மாநில மக்கள்.

அரியானாவில், கடந்த ஜூன் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ரோடக் மாவட்டம், சிரி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தரம்பால் போட்டியிட்டார். 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


தரம்பாலுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். அவரது தோல்வியை கிராம மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்றுமுன்தினம் தாராம்பாள் பெருவிழா நடந்தது. அப்போது கிராம மக்களிடம் ரூ.2.11 கோடி ரொக்கம் வசூல் செய்யப்பட்டு, மஹிந்திரா ஸ்கார்பியோ சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிரி கிராமத்தை சேர்ந்த பலராம் கூறும்போது, “கிராம மக்கள் தரம்பாலுடன் உள்ளோம் என்பதை நிரூபிக்க பிரம்மாண்ட விழாவை நடத்தி ரொக்கப் பரிசு, சொகுசு காரை அவருக்கு பரிசாக வழங்கினோம். அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்” என்றார்.


தரம்பால் கூறும்போது, “எனது கிராம மக்களின் அன்பால் நெகிழ்ச்சி அடைந்துள்ளேன். இவர்கள் அனைவரும் எனது அண்ணன், தம்பிகள். அவர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைப்பேன்” என்றார்.