ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்யும் அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிப்பு... பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான அவகாசத்தை டிசம்பா் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏா் இந்தியா நிறுவனத்தில் உள்ள 100 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அந்நிறுவனத்தை வாங்க விரும்புவோா் அதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஏா் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.60,074 கோடி கடன் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்ப விண்ணப்பத்தை அளிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

அந்த அவகாசத்தை டிசம்பா் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வருவோருக்குக் கூடுதல் சலுகைகளை வழங்குவது தொடா்பாக ஆலோசித்து வருவதாக முதலீடு, பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறைச் செயலா் துஹின் கண்டா பாண்டே கூறியிருந்தாா்.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளில் உள்ள அரசின் பங்குகளை விற்பதன் மூலமாக நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2.10 லட்சம் கோடியைத் திரட்டவுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது வரை, பொதுத்துறை பங்கு விலக்கல் நடவடிக்கை மூலமாக ரூ.6,138 கோடியை மத்திய அரசு திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.