‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் விளம்பர தடை நீட்டிப்பு

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் இந்த தேர்தல் குடித்து சர்ச்சையான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் விளம்பர தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ‘பேஸ்புக்’ தனது வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்த விளம்பரங்களுக்கான தற்காலிக இடை நிறுத்தம், தேர்தலை பாதுகாப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இந்த விளம்பரங்களை விரைவில் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும்கூட, இன்னும் ஒரு மாதம் தடை நீடிக்கும் என விளம்பரதாரர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் பகிர்வு மற்றும் பிற முறைகேடுகளை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நடவடிக்கையை ‘பேஸ்புக்’ மேற்கொண்டு உள்ளது. ஜார்ஜியாவில் ஜனவரி மாதம் செனட் சபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த தடை வாக்காளர்களை சென்று அடைவதற்கான ஆர்வமுள்ள பிரசார நிர்வாகங்கள் மற்றும் குழுக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி வருகிறார். இதனால் அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் குறித்து பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.