பணிக்கு திரும்பாவிடில் ஓட்டுநர் உரிமம் ரத்து, அபராதம் விதிக்கப்படும்

தென்கொரியா: ஸ்டீல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சங்கங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர்களை பணிக்கு திரும்புமாறு தென்கொரிய துணை பிரதமர் சூ கியுங்-ஹோ உத்தரவிட்டுள்ளார். இல்லாவிடில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஸ்டீல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சங்கங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர்களை பணிக்கு திரும்புமாறு தென்கொரிய துணை பிரதமர், சூ கியுங்-ஹோ (Choo Kyung-ho) உத்தரவிட்டுள்ளார்.

லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் 2 ஆயிரத்து 500 சிமெண்ட் லாரி ஓட்டுநர்களை பணிக்கு திரும்புமாறு தென் கொரிய அரசு உத்தரவிட்டிருந்தது.

தவறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, 3 ஆண்டுகள் சிறை, மற்றும் 22 ஆயிரத்து 550 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.