பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா உறுதியானது

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார். அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம் 2.6 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இதனால் சின்னத்திரை படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் நடைபெற்று வருகிறது. சினிமா படப்பிடிப்புக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

கொரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். சிலருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் குணமாகி விட்டார்கள். தமிழ்த் திரையுலகில் முதல் நபராக தனக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தவர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரும் குணமாகி விட்டார்.

இன்று (ஆகஸ்ட் 5) காலை முதலே பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இது தொடர்பாகப் பலரும் தொலைபேசியில் விசாரிக்க அழைக்கவே, உடனடியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பி.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2, 3 நாட்களாக உடல்நிலை சீராக இல்லை. சளி, காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. இதுதவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நான் இதை எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே நான் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தேன். எனக்கு மிக மிக லேசான கொரோனா தொற்று இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சில மருந்துகளை உட்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். நான் இதை விரும்பவில்லை. குடும்பத்தோடு இருக்கும்போது இது மிகவும் கடினமான விஷயம். அவர்கள் நம்மை எப்போதும் தனிமையில் விடமாட்டார்கள். எனவே நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் என்னை நல்லபடியாகப் பார்த்துக் கொள்கின்றனர்.

நான் நன்றாக இருக்கிறேன். இதுகுறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். இன்னும் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடுவேன். நன்றி. இவ்வாறு எஸ்.பி.பி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பி. அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.