நடுவானில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞருக்கு சிறை

சென்னை: நடு வானில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை சென்னையில் விமானம் தரையிறங்கியதும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று அபுதாபியிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் இளம்பெண் ஒருவர் திடீரென கத்தி கூச்சலிட்டார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் பயணி இருக்கைகளுக்கு இடையே கையை விட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பல முறை கைகளை தட்டிவிட்டும் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் விமான பணிப்பெண்களிடம் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டதால், விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் ஏறி, காரைக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற அந்த இளைஞனை விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர்.

தெரியாமல் கை பட்டது ஒரு குற்றமா என பதில் கேள்வி கேட்ட இளைஞரை அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதிகாரிகளிடம் வீர வசனம் பேசிய சக்தி காவல் நிலையத்தில் தன் மீது புகாரளிக்க வந்த பெண்ணிடமும் வேலை போய்விடும் என கூறி மன்னிப்பு கேட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சக்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சக்தி சவுதி அரேபியாவில் ஹவுஸ் கீப்பிங் செய்துவருவது விசாரணையில் தெரியவந்தது.