கொரோனா ஊரடங்கு காரணமாக ஆர்டர்கள் குறைவு... பட்டாசு உற்பத்தியில் சுணக்கம்!

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது மிக முக்கியமான நிகழ்வாகும். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெறும். விருதுநகர் மாவட்டம் பட்டாசு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. இங்கு சுமார் 1,100 பட்டாசு ஆலைகள் உள்ளன. சிவகாசியில் இருந்துதான் 90 சதவீதம் பட்டாசுகள் உற்பத்தி ஆகின்றன.

ஆனால் கடந்த ஆண்டுகளில் மாசு கட்டுப்பாடு பிரச்சனையால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பசுமை பட்டாசு தயாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டபோது அதனை தயாரிப்பது எப்படி? என சில பட்டாசு ஆலைகள் கேள்வி எழுப்பின. அதனை சமாளித்து பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தபோது உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் மீண்டும் தொழில் பின்னடைவை சந்தித்தது.

வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு ஆர்டர்கள் அந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலே தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆர்டர் தொடங்கிய 2 மாதத்தில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக மார்ச் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பட்டாசு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வு காலத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் உற்பத்தியை தொடங்கலாம் என அரசு அறிவித்த நிலையில் மூலப்பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ஓணம், தசரா உள்ளிட்ட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் பட்டாசு ஆர்டர்கள் வரவில்லை.

தற்போது அனைத்து நிறுவனங்களும் முழு வீச்சில் இயங்க அரசின் அனுமதி உள்ளது. பட்டாசு ஆலைகளும் முழுமையாக திறக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கின. ஆனால் ஆர்டர்கள் குறைவு காரணமாக உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.