கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே முதல் கையெழுத்து - கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கமலா ஹாரிஸ் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, ஜனாதிபதி வேட்பாளராக என்னை நிறுத்துவதாக ஜோ பிடன் கூறியபோது எனக்கு என்னுடைய தாய் தான் நினைவுக்கு வந்தார். நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதை மேலேயிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். தேர்தலில் வெற்றிபெற்று, நாங்கள் பதவியேற்ற முதல் 100 நாட்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று கூறினார்.

மேலும் கமலா ஹாரிஸ், எங்களுடைய முதல் கையெழுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே இருக்கும். அதிக அளவில் பரிசோதனைகள் செய்வது, தடுப்பூசி கண்டுபிடிப்பதை வேகப்படுத்துவது ஆகியவை மேற்கொள்ளப்படும். பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைவது மிக முக்கியமான திட்டமாகும் என்று தெரிவித்தார்.

அதன்பின், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுடனான உறவை புதுப்பித்தல் மற்றொரு முக்கியமான பணியாகும்.போதிய ஆவணங்கள் இல்லாமல் அகதிகளாக தவிக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக எங்களுடைய நிர்வாகம் கருணையுடன் பரிசீலிக்கும். இனவெறி தாக்குதலை தடுப்பதற்கான மசோதா நிச்சயம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.