கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கொண்டாடுங்கள்... முதல்வர் பக்ரீத் வாழ்த்து

சென்னை: கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கொண்டாடுங்கள்... கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து கொண்டாட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பக்ரீத் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள். அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்.

அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.