தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் மு.க.அழகிரி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க.அழகிரி பற்றியும் செய்திகள் வலம் வருகின்றன. அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், ரஜினி கட்சியில் இணைய உள்ளதாகவும் , தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், அவற்றையெல்லாம் மு.க.அழகிரி மறுத்து வந்தார். நான் கருணாநிதி மகன். அடுத்த கட்சிக்கு செல்ல மாட்டேன்'' எனக்கூறி வந்தார். அதற்காக அண்ணன் ஒரேயடியாக அரசியலில் இருந்து வெளியேறிவிடுவார் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என்று அவரது ஆதரவாளர்கள் உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அழகிரி புதிய கட்சியை அறிவிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. கட்சியின் பெயர் தலைவர் கலைஞர் திமுக அதாவது (த.க.தி.மு.க) கட்சிப்பெயரை பதிவு செய்வதற்கான பணியையும் அவர் தொடங்கி விட்டார். இந்த புதிய கட்சியின் அறிவிப்பை தனது பிறந்த நாளான ஜனவரி 30ம் தேதி வெளியிட இருக்கிறார். உடனடியாக மாநாடு ஒன்றையும் அவர் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மு.க.அழகிரியில் புதிய கட்சி, ரஜினி கட்சியோடு இணைந்து பயணத்தை தொடங்க உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சியின் கொடி, கொள்கைகள் பற்றி மு.க.அழகிரி தினமும் தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மு.க.அழகிரி அதனை மறுக்கவும் இல்லை.