முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் இன்று மரணம்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் 74 வயதுடைய ரகுவன்ஷ் பிரசாத் சிங் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், கிராமப்புற வளர்ச்சிக்காக பல திட்டங்களை முன்னின்று கொண்டு வந்தவர். கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை கொண்டு வந்தவர்.

லாலு பிரசாத் யாதவுடன் மிகவும் நெருக்கமான தலைவராக இருந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செல்லவிருப்பதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அவர் காலமடைந்தது அனைவரையும் வருந்தச்செய்துள்ளது.