புதுவை மாநிலத்தில் இன்று முழு ஊரடங்கு; வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவும் வேகம் அதிகரித்ததால் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதாவது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்துவது, கடைகள் திறப்பு நேரத்தை காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் செவ்வாய்க் கிழமை முழு ஊரடங்கிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் புதுவை மாநிலத்திலும் அதே கிழமையில் அமல்படுத்துவது தான் உகந்தது. ஏனென்றால், வெவ்வேறு கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்துவதால் அங்கிருப்பவர்கள் இங்கும், இங்கிருப்பவர்கள் அங்கு செல்வதை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் முகூர்த்தம் மற்றும் புதுவை விடுதலைநாள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த வாரம் செவ்வாய்க்கிழமை இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, அதன்பின் ஊரடங்கு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

ஏற்கனவே அறிவித்தபடி புதுவை மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் இந்த ஊரடங்கு தொடங்கிவிட்டது. நாளை (புதன்கிழமை) காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஊரடங்கின்போது பால் பூத்துகள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்து இருக்கும். அதேபோல் கியாஸ் வினியோகம் செய்யலாம். பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடி இருக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது. ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று மாலையில் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுவகைகளை வாங்கி தங்களது வீடுகளில் இருப்பு வைத்துக் கொண்டனர்.