வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம்

வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளைத் தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் மெரினா கடற்கரையைத் தவிர பிற நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டிப் பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின்போது, தடையைத் தளர்த்த இயலாது எனத் தமிழக அரசு தெரிவித்து விட்டது. விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படாது எனவும், முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் இந்து முன்னணி, தமிழ்நாடு சிவசேனா ஆகியவை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணாலான விநாயகர் சிலைகளைத் தனி நபர்களே நீர்நிலைகளில் கரைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

சென்னையில் மெரினா கடற்கரையைத் தவிரப் பிற நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.