ஆட்டோ மீது அரசு பஸ் மோதி விபத்து: தந்தை-மகன் பலி

அரசு பஸ், ஆட்டோ மீது மோதிய விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவா (வயது 40). இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு 10-ம் வகுப்பில் படிக்கும் சந்தியா (14) என்ற மகளும், 7-ம் வகுப்பில் படிக்கும் மணி (12) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதிகா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் சந்தியாவும், மணியும் வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாட்டி சாவித்திரி வீட்டிற்கு வந்துவிட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவா சென்னை புளியந்தோப்பில் இருந்து பிராமணமங்கலத்துக்கு வந்தார். நேற்று மதியம் சிவாவும். மணியும் குடியாத்தத்தில் உள்ள கடைக்கு ஆட்டோவில் வந்தனர். குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் அருகே வரும்போது, குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் படுகாயம் அடைந்து ஆட்டோவில் சிக்கி இருந்த சிவா மற்றும் மணியை அப்பகுதி பொதுமக்கள் போராடி மீட்டனர். ஆனால் சில நிமிடங்களிலேயே தந்தையும், மகனும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்து விபத்தில் பலியான தந்தை-மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.