68 நாட்களுக்கு பின்னர் இன்று தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கம்

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் அரசு பேருந்துகள் இன்று முதல் இயங்குகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது.

இதையடுத்து தமிழகத்தில் பல தளர்வுகளை அளித்து, ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அறிவித்தார். அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் அரசு பேருந்துகள் இன்று காலை முதல் ஓடத்தொடங்கின.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் சுமார் 68 நாட்களுக்கு பின்னர் இன்று அரசு பேருந்துகள் இயங்கின.