கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியீடு

சென்னை: கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ... கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதை அடுத்து மேலும் சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி ஆகிய திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு நல வாரியம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 01.09.2021 அன்று பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:

அதன் படி தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது

மேலும் தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.