வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இதே போன்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ள தேவையான சாதிவாரி புள்ளி விவரங்களை பெறுவதற்கும் தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிபதி ஏ. குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 7-ம் தேதி முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ. குலசேகரன், ஆணையத்தின் தலைவராக 21-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள கட்டிடத்தில் இந்த ஆணையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. புதிய அலுவலகத்தில் நீதிபதி குலசேகரன் தனது பணியை தொடங்கினார். இதன்பின்பு அவர், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை எந்த அடிப்படையில் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை குறித்து நீதிபதி குலசேகரன் கூறியதாவது:- எந்த அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 1970-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டநாதன் ஆணையம், 1985-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அம்பாசங்கர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோரிடம் இருந்து மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதுதவிர கருத்தரங்குகள் மூலம் சாதிவாரியான புள்ளி விவரங்களை பெறவும் முடிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இந்த கணக்கெடுப்பின்போது புலம் பெயர்ந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும். ஆறு மாதத்துக்குள் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என அவர் கூறினார்.