பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு மேலும் ஒரு பயங்கரவாத நிதி வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து துப்பாக்கிகளால் சுட்டு, குண்டுகளை வெடித்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆவார்.

மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும், நீதியின் முன் நிறுத்துவதற்கு அவரைப் பற்றிய தகவல்களை அளிப்போருக்கு 10 மில்லியன் பவுண்ட் பரிசு அளிக்கப்படும் எனவும் கூறியது. இருப்பினும் அவரை கைது செய்ய பாகிஸ்தான் மறுத்துவந்தது. சர்வதேச அளவில் தொடர்ந்து நிர்ப்பந்தங்கள் வந்ததைத் தொடர்ந்து ஹபீஸ் சயீத் மற்றும் அவரது லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா, பலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளை ஆகியவற்றின் மீது பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணையை முடுக்கி விட்டனர்.

தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களிலும் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது மொத்தம் 23 வழக்குகளை பயங்கரவாத தடுப்புப் படையினர் பதிவு செய்தனர். 70 வயதான சயீத்துக்கு ஏற்கனவே 4 பயங்கரவாத நிதி வழக்குகளில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மேலும் ஒரு பயங்கரவாத நிதி வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

மேலும் அவருக்கு ரூ.2 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்தது. ஹபீஸ் சயீத் தற்போது லாகூரில் கோட் லக்பத் சிறையில் உள்ளார். 5 பயங்கரவாத நிதி வழக்குகளில் சயீத் 36 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.