சென்னையில் நேற்று இரவு கனமழை... போக்குவரத்து பாதிப்பு

சென்னை: கனமழையால் மக்கள் அவதி... சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாளை மறுநாள் வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மழை நீடித்தது. அண்ணா சாலை, வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. வடபழனி ஆற்காடு சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்தது. தாழ்வான பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. சேலம், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி மாநிலத்திலும் நேற்றிரவு பரவலாக கனமழை கொட்டியது.

இந்த நிலையில் நாளைமறுதினம் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.