சீனாவில் கனமழை காரணமாக 20 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றிய சீனாவில் கடந்த 2-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. யுகான், சுற்றுலாத்தலமான யாங்ஸ்யு உள்பட 8 மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழை காரணமாக 8 மாகாணங்களில் உள்ள 110 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.10 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்புள்ள பயிர்கள் நாசமாகின. 2,800 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களோடு போலீசாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கனமழை காரணமாக தென்மேற்கு மாகாணத்தில் 8 பேர் உள்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். யாங்ஸ்பு மாகாணத்தில் ஆயிரம் ஓட்டல்கள், 5 ஆயிரம் கடைகள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.அங்குள்ள சுற்றுலா பயணிகளும், கிராம மக்களும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கனமழை வெள்ளம் காரணமாக பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளன. மேலும் இந்த கனமழை காரணமாக பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவிலிருந்து மீண்ட சீனா தற்போது கனமழை காரணமாக மேலும் பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது.